Tuesday, December 14, 2010

ஏக்கங்கள் ஏராளம்

ஏக்கங்கள் ஏராளம்

ஏங்கியிருக்கிறேன் நானும்
சில இடங்களில்
சில நேரங்களில்...

இன்னும்
சில நிமிடங்களாவது
வாழ மாட்டோமா எனக்
கடைசி நிமிடத்தில்
நினைக்கும்
தூக்குத் தண்டனைக்
கைதியைப் போல...

நினைவை எங்கோ
நீந்த விட்டுவிட்டு
கனவுலகில் வகுப்பைக்
கவனிக்கும் மாணவர்கள்
மணியோசைக்காகக்
காத்திருப்பதைப் போல...

தூரத்தில் இருந்தாலும்
நினைவுகளை மட்டும்
நெருக்கமாக்கிக் கொண்டு
அயல் நாட்டில்
அலுவலுக்குச் சென்ற
கணவன் திரும்பும்
நாளை எதிர் நோக்கும்
இளம் மனைவியைப் போல...

வர மாட்டாளா
வந்து உயிர் தர மாட்டாளா
வளம் கொழிக்காதா என்று
காவிரியைக் கருத்திற்கொண்டு
வறண்ட நிலத்தை
வலம் வரும்
தமிழகத்து விவசாயியைப் போல...

ஏங்கியிருக்கிறேன் நானும்
சில இடங்களில்
சில நேரங்களில்...

No comments:

Post a Comment